psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

Sri Varahi Anugraha Ashtakam – Tamil

🕉️ ஸ்ரீ வாராகி
Translations

🎵 Watch/Listen on YouTube


1)
அண்டமெலாம் ஆக்கிவைத்து
 ஆட்டிவைக்கும் நாடகத்தை
நன்றாக இயக்குகின்ற
   நாதன்அந்த ஈஸ்வரனே
நின்றாடும் உந்தன்மெய்
    ரூபமதை அறியாமல்
திண்டாடும் போதினிலே
    உன்புகழை பாடலெனக்
கொண்டாடிப் பாடிடவே
    யாருள்ளார் அன்னையளே ?
 

வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)

2)
அண்டமதே திருமுகமாய்
  கொண்டவளின் நாமமதை
அன்றாடம் உரைப்பார்க்கு
  காலபயம் கிடையாதே !
உந்தன் திருநாமமதை
  உச்சரிக்கும் நொடியினிலே
சம்சாரக் கடல்தன்னை
 சரளமெனக் கடப்பாரே !
நின்நாமம் அதுபோதும்
 நெடும்பாடல் வேண்டிடுமோ?

வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)  

3)
மாறாத நின்நினைவை
  மனதோடு கொண்டதினால்
தீராத ஆனந்தம்
 கொண்டேனே அம்பிகையே !
கூராக உரோமங்கள்
 சிலிர்ப்புடனே நின்றிடவே
ஓயாமல் இந்தநிலை
  தொடர்ந்திடவே வேண்டுகிறேன் !
தாயே!நீ தருவாயே !
  தயவுடனே வரமதனை !
 வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)  

4)
இந்திரனும் மூவருமே
  உந்தன்மலர் பதங்களதை
வந்தனங்கள் செய்கையிலே
  அவர்மகுட ரத்தினங்கள்
சுந்தரமாய் உந்தன்கரு
  மேனியிலே மின்னிடுமே !
சிந்தையெலாம் நின்றவளே !
 துன்பமெலாம் தீர்ப்பவளே!
உந்தன் திருச் சேவையினை
  உளமாரச் செய்வேனே !

 
வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)  
 
5)
பந்தெனவே பூமியதை
  விளையாட்டாய் தாங்கியொரு
விந்தையினை செய்தவராம்
 வாராக மூர்த்தியவர்
மேனியென ஆனவளே !
  மங்கலத்தின் வடிவினளே !
ராணியென ஈசனவன்
  மேனியிலே  இடமாகி
நானிலத்தை ஆள்பவளே !
  நிலவணிந்த நாயகியே !
 
 வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)  
 
6)
பெண்ணுருவம் கழுத்துவரை
  மின்னுகின்ற தங்கம்போல் !
கண்மூன்று, பன்றிமுகம்
  கரம்தாங்கும் சக்கரமே !
அன்னையளே ! வாராகி !
  அன்புடனே ஒருமனதாய்
உன்னைதினம் பணிவோரின்
  பதங்களதை இன்பமுடன்
விண்ணகத்து தேவரெலாம்
  வாழ்த்திடுவார் ஆசியுடன் !
 
வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)  
 

7)

எளியோன்யென் பாவமெலாம்
  கரைந்தோடிப் போனதுவே !
வலியவளே ! வாராகி !
  நின்சேவை செய்வதனால்…!
மன்னவரும், தேவர்களும்,
  அசுரர்களும், நாகர்களும்
என்னடியைப் பணிந்திடுவார்
  உன்பக்தன் என்பதனால்
என்கின்ற போதெனக்கு
  முக்தியதும் முக்கியமோ?

 
வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)  
 

8)

சிந்தையிலே உனைவைத்தார்
 சேராத இடமுண்டோ?
வந்தனங்கள் செய்வார்க்கு
  வாய்க்காத பொருளுண்டோ?
நெஞ்சோடு வைத்தார்க்கு
  “ஆகாது” எனவுண்டோ?
தஞ்சமென்று வந்தார்க்கு
  தோல்வியதும் இங்குண்டோ?

 
வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (4)