psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

வேல்மாறல் – பொருள் – எளிய பாடல் வடிவில்

🕉️ ஸ்ரீ முருகன்
Simplified

🎵 Watch/Listen on YouTube


1)
திருத்தணியில் ஞானமெனும்       
    சூரியனாய் ஒளிரும்
குறுஞ்சிமலைத் தலைவன்!
   மயிலேறி வருவோன் !
எந்தன்உளம் எனும்குகையில்
   நிறைந்திருக்கும் முதலோன் !
கந்தகுகன் ஞானவுரு
   ஆனதுவாம் வேலே !
 
2)

செந்நிறமாய் உதடுகளும்
  சிற்றிடையும், பெருமார்பும்
வெண்ணிறமாய் பற்களுடன்
  கருங்குழலும் கொண்ட..
வள்ளியவள் விழிகளைப்போல்
  கூரியதாய், பெரிதாய்
உள்ளதுவாம் கந்தனவன்
  கரம்பிடிக்கும் வேலே !

3)
சொற்களிலே அடங்காத
 பெருமைமிகு திருமுருகன்
பொற்பாதம் போற்றுகிற
  திருப்புகழை ஓதும்..
அடியார்க்கு நிகழ்கின்ற
  பகையதனை விரைவாய்
அழித்திடவே சினத்துடனே
  புறப்படுமே வேலே !

4)
படைகளுடன் உயிரெடுக்க
  காலன் வரும்போது,,
அடைக்கலமாய் ஆகும்திரு
 அடிகளினைக் கொண்ட…
பிறைசூடன், எருக்குமலர்
  மாலையினை சூடும்
இறையவனாம் சிவனாரின்
  அடிக்குநிகர் வேலே !
5)
கன்னம்வடி மதநீரும்
  நெடிதான தும்பிக்கையும்
வண்ணமிகு துணியுடனும்
  வலம்வருமோர் யானை…
கொண்டவனாம் இந்திரனின்
  கால்களிலே பூட்டியதாம்
தண்டைபோல சங்கிலியை
  தெறிக்கவிடும் வேலே !
6)
 அறுபட்ட தலைகளெலாம் 
     சிரிக்கின்ற படியும் 
இருபுறமும் விழிகளவை
    உருட்டுகிற படியும்
வாய்களவை சத்தமுடன் 
   அலறுகிற படியும்
போய்சாடி அரக்கர்களை
    வதமுடிக்கும் வேலே!
7)
தனைப்போற்றி புகழ்கின்ற
  அடியார்க்கு தீங்குதர
நினைத்தாலும் கூட அவர்
  நினைக்கின்ற கணமே..
நினைப்பவரை அழிப்பதுடன்
  அவர்குலமே அழித்து
துணையாக வந்திடுமே
  திருமுருகன் வேலே !
8)
உலகிலுறை கணங்களுக்கு
  உணவளித்துக் களிக்க…
மலர்முகத்தான் முருகனவன்
  விரல்நுனியின் அசைவில்..
வளைத்துணவு சேர்ப்பதுடன்
 உண்டவர்கள் மகிழ்வில்
திளைத்திடவும் வைத்திடுமே
  பசிதீர்க்கும் வேலே !
9)

மிகப்பழமை வாய்ந்ததுவாம்
  மதுரைத்தமிழ் சங்கத்திலே
மிகத்திறமை வாய்ந்தவராம்
   கவிப்புலவர் கீரர்
இசைத்ததுவாம் ஆற்றுப்படை
  அதிலுருகி அவரிருந்த
குகைஉடைத்துக் காத்ததுவாம்
  குகன்கரத்து வேலே !

10)
மலைகளதன் சிறகொடித்து
  நிலத்தோடு அவற்றை
நிலையாகச் செய்தானே
  இந்திரனும் முன்பு…
மறுபடியும் சிறகுடனே
  மலைகள்பறப் பதுபோல்
பெருவிசையில் அண்டமெலாம்
  சுழலுகின்ற வேலே !
11)
சுடராகும் சூரியனின்
  சுடரொளியைத் தாண்டி 
கடலடியின் ஊழித்தீ
   கதிரொளியும் தாண்டி 
குளிர்வான சந்திரனின்
  குளிரொளியும் தாண்டி 
மிளிர்வாக ஒளிவீசும்
  முருகனவன் வேலே !
 
12)
தனியாக நானெந்தத்
 தடம்தன்னில் சென்றாலும்
துணையாகி பகற்பொழுதும்
  இரவிலுமே எந்தன்..
இடப்புறமும், வலப்புறமும்
 என்முன்னும், பின்னும்
உடனாக வந்தெனையே
  காக்கும்குகன் வேலே !
 
13)
பசிமிகவே வேதனையில்
  பேய்களெலாம் அழுதரற்றி
புசித்திடவே தனைத்தானே
  வருத்துவதும் ஏனோ? 
சத்துமிகும் மாமிசமாய்
  அரக்கர்சதை யுடனே
ரத்தத்தையும் தந்திடுமே
  திருமுருகன் வேலே !
 
14)
அலையாடும் கடலுடைத்து
  அதிலிருக்கும் நீரை
சலையாமல் முழுதாக
  உறிஞ்சி அதன் பின்பு
குலைநடுங்கும் அசுரர்களின்
  குருதியினை எடுத்து
விளையாட்டாய் கடல்நிரப்பிக்
  களித்திருக்கும் வேலே !
 
15)
முனிவருக்கும், தேவருக்கும்
  மால், அயனார், இந்திரர்க்கும்
மனிதருக்கும் வருகின்ற
  துன்பங்களுக் கெல்லாம்
அடிப்படை காரணமாம்
  முன்வினைகள் தன்னை
பொடிபடவே உடைத்திடுமே
  பரமன்மகன் வேலே !
 
16)
போர்களிலே கோபமுடன்
  பாய்ந்துவரும் அரக்கர்களை 
மார்புடைத்து அவர்கொழுத்த
    குடலுருவி அதனை
சிவந்தமலர் என்பதுபோல்
  சிகையினிலே சூடி
உவந்திடுமே திருமுருகன் 
 கரம் பிடித்த வேலே
 
17)
திருத்தணியில் ஞானமெனும்       
    சூரியனாய் ஒளிரும்
குறுஞ்சிமலைத் தலைவன்!
   மயிலேறி வருவோன் !
எந்தன்உளம் எனும்குகையில்
   நிறைந்திருக்கும் முதலோன் !
கந்தகுகன் ஞானவுரு
   ஆனதுவாம் வேலே !