ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம் தமிழில்
1)
கற்பக மலர்போல் மிளிர்பவளே !
கமல மலர்கண்கள் கொண்டவளே !
அற்புத அணிகலன் பலவோடு
அழகாய் மாலையும் பூண்டவளே !
கரியின் மத்தகம் போல்நகிலும்
கரிய கூந்தலும் கொண்டவளே !
கலியின் பாவங்கள் தீர்த்திடவே
காளி தேவியென வந்தவளே !
காஞ்சி மாநகர் நாயகியே !
கருணை உளத்தாயே மங்கலமே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
2)
சுந்தர நிலவாய் ஒளிர்பவளே !
புல்லின் நிறக்கிளி கொண்டவளே !
சந்திர, சூரியர், அக்னியினை
கண்கள் மூன்றாய்க் கொண்டவளே !
வாரண ராஜனைப் போலான
தோரணை காட்டும் தேவியளே !
நாரணன், இந்திரன், தேவர்களும்
நாடியே உன்பதம் தொழுவாரே !
சூடும் அணிகலன் ஜொலிப்பாலே
மேலும் மிகையாய் மிளிர்பவளே!
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
3)
உள்ளக் குகையில் உனைவைத்து
உருகித் தொழுவார் மாமுனியோர் !
தெள்ளிய மெய்ப்பொருள் உன்னுருவை
ஐம்க்லீம் சௌஎனும் மந்திரத்தால் !
செப்பிடும் வாக்கின் அதிபதியே!
செம் பருத்திபூ நிறத்தவளே !
நெற்றியில் திருக்கண் கொண்டவளே !
நலமருள் பாலா அம்பிகையே!
சுழுமுனை நாடியில் உறைபவளே !
சுந்தர மாலைகள் தரித்தவளே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
4)
உந்தன் மலர்பதத் துகள்கொண்டே
உலகினை படைப்பார் நான்முகனும் !
சிந்திடும் உன்னருட் கருணையினால்
திருமால் உலகைக் காப்பாரே !
மாயை நிறைந்த உலகிதனை
முடித்து வைப்பாரே ருத்திரனும்
தாயே ! உந்தன் துணையால்தான்..
தன்தொழில் செய்வார் மூவருமே !
அழகாய் விதவித லீலைகளாய்
திருவிளையாடல் செய்பவளே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
5)
மெல்லிய ததிலும் மெல்லியதாம்
உந்தன் வடிவின் சாராம்சம் !
வல்லிய அரக்கரை மென்படுத்தும் !
மூவுல குக்கும் அமைதிதரும் !
சீரிய த்யானங்கள் செய்வார்க்கு
சீக்கிர மாக உணர்வாகும் !
நேரிடும் நிகழ்வுகள் சாட்சியென
தட்சன் மகளுனைத் தான்காட்டும் !
தெய்வத் திருவிளை யாடல்கள்
நடத்திடும் மங்கல மானவளே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
6)
உபநிட தத்தின் மலைமாடம்
அதில்நீ தீபம் ஓங்காரம் !
உலகிதன் ஆன்மா விளக்காகும் !
மறைகள் நான்கின் ஒளியாகும் !
காஞ்சி நகரெனும் கூண்டினிலே
கிளியைப் போலே நீயம்மா !
வாஞ்சை மிகுந்த எம்தாயே..
கருணை அலையினை வார்ப்பவளே !
காமேஸ் வரனின் மகராணி !
பாவம் தீர்க்கும் மலைமகளே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
7)
உவந்துன் மந்திரம் ஹ்ரீம்தன்னை
உச்சரி த்தாலே சௌபாக்யம் !
புவனேஸ் வரியாய் உலகிற்கே
உணவை அளிப்பாய் அனுதினமும் !
ஜகத்தினைத் தாங்கும் அன்னையளே !
பரம்பொருள் ஆனத் தூயவளே !
முகமோ அழகாய் ஒளிர்கின்ற
முழு நிலவாகக் கொண்டவளே !
கூடிய பாவங்கள் தீர்ப்பவளே !
மாசிலா மணியே ! எம்தாயே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
8)
வாக்கின் அதிபதி கலைமகளாய்
வாழ்த்தி டுவாருனை முனியோர்கள் !
பாற்கடல் தோன்றிய திருமகளாய்
பாடிடு வார்கள் மற்றோர்கள் !
நலமருள் மலைமகள் என்றுன்னை
நன்றாய் போற்றும் அருமறைகள் !
பலபல வடிவம் கொண்டாலும்
கருணை மாறாத் தாயவளே !
வாட்டும் இன்னல்கள் தனைதீர்த்து
வகைவகை பலன்கள் தருபவளே !
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
9)
பேரானந்தத் தேன் ஊறும்
உறைவிடம் கொண்டாய் அன்னையளே !
சீரார், கற்றோர் அவரேற்றும்
சீரிய ஞானப் பரம்பொருளே !
மாயை என்பதன் ஆதியளே!
மூவுல கும்தொழும் மலர்பதமே!
மாயையால் மனிதராய் உருக்கொண்டு
மணிரத் தினமாய் ஜொலிப்பவளே !
ராஜ யானையைப் போலானக்
கம்பீர நடையைக் கொண்டவளே
Chorus:
ஈசன் சிவனார் அன்பினளே !
காமாட்சி தாயே வணங்குகிறேன் ! (2)
10)
அம்பா ! மங்கல காமாட்சி !
அன்புடன் பக்தருக் கருள்பவளே !
கம்பா நதியின் கரையோரம்
மாமரத் தடிஉறை கருணையளே !
ஈசன் மேனியில் பாதியென
இடபா கத்தைக் கொண்டவளே !
வாசம் வீசும் கஸ்தூரி
தேகம் முழுதுமாய் மணப்பவளே !
வீரக் களிறுபோல்
நகர்பவளே !
காம தேனுபோல் தருபவளே !
Chorus:
மங்கலம் பொங்கும் ஆனந்தம்
எந்தன் வாழ்வில் தாருமம்மா ! (2)
எந்தன் வாழ்வில் தாருமம்மா !