மீனாட்சி பஞ்சரத்னம்

1)
மிளிரும் மஞ்சள் ஆடையுடன்
மாலைகள், நகைகள் பலசூடி,
ஒளிரும் சூரியன் ஆயிரமாய்
ஜொலிக்கும் தாயே ! மீனாட்சி !
புன்னகை சிந்திடும் திருமுகத்தில்
சுந்தர மான பல்வரிசை !
செந்நிற கொவ்வை அதரங்களும்
சேர்ந்ததோர் அழகு பதுமையளே !
இந்திரன், ப்ரம்மா, திருமாலும்
உந்தன் மலர்பதம் தொழுவாரே !
மங்கல வடிவின் சாரமென
மகிழும் பரம்பொருள் ஆனவளே !
Chorus:
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் உனையே மறுபடியும் !
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் மறுபடி மறுபடியும் !
2)
முத்தணி பூண்ட திருமார்பும்
முழுநில வான திருமுகமும்
ரத்தினம் ஒளிரும் மகுடமுமே
ரம்மிய அழகாய் ஒளிர்ந்திடுமே !
திருப்பதம் சூடிய கொலுசுமணி
தாமரை மலராய் ஒளிவீசும் !
விரும்பிடும் யாவையும் தந்திடுமே!
வேண்டிய தருளும் மலர்பதமே !
கலைமகள், திருமகள் இருவருமே
களிப்புடன் உன்னைத் தான்சூழ
மலைமக ளாக வருபவளே !
மங்கல வடிவாய் ஆனவளே !
Chorus:
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் உனையே மறுபடியும் !
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் மறுபடி மறுபடியும் !
3)
ஹ்ரீமெனும் மந்திர வடிவாகி
சிவனார் இடப்புறம் நின்றவளே !
ஸ்ரீசக்ர நடுவும் நீதானே !
ஸ்ரீவித்யா வடிவும் நீதானே !
பிந்துஸ்தான மண்டலத்தில்
திதிதே வதைகள் சூழ்ந்திடவே
சுந்தர மாக நடுவினிலே
உறையும் தேவி நீதானே !
கந்தன், கணபதி அன்னையளே !
அண்டம் இதற்கே அன்னையளே !
மந்திர லீலைகள் அதனாலே..
மனங்களை கவரும் மலைமகளே !
Chorus:
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் உனையே மறுபடியும் !
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் மறுபடி மறுபடியும் !
4)
எழில்மிகு அன்னையே! உன்கோலம்
கண்டதும் அச்சங்கள் தீர்ந்துவிடும் !
அழிந்திடும் பாவங்கள் அவையாவும் !
அற்புத ஞானம் கைகூடும் !
கார்நிற தேவிநின் பதங்களையே..
பூவினன் பிரமனும் போற்றுவது
நாரணன் சோதரி ஆனவளுன்
வான்புகழ் தன்னைக் காட்டிடுமே!
வீணை,ம்ருதங்கம், குழலிசையும்
தேவி!உந்தன் மனம் கவரும் !
லீலை செய்து பலவடிவாய்
தாயாய் தோன்றும் தேவியளே !
Chorus:
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் உனையே மறுபடியும் !
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் மறுபடி மறுபடியும் !
5)
உட்பொருள் என்றே தானாகி
உலகெலாம் நிறைந்தே இருப்பவளே !
அற்புத நாத ப்ரம்மமென
உயிர் நாடியாய் உறைபவளே !
நறுமண மலர்கள் பலவிதமாய்
நிறைந்தே இருக்கும் உன்னடியை
திருமால் அவரும் பணிந்திடவே
திகழ்ந்திடும் கயல்விழி அன்னையளே !
முனியோர், ரிஷிகள், யோகியரும்
உள்ளக் கோயிலில் உனைத்தொழுவார்
கனிவாய் அவருக்கு தாயேநீ
சித்திகள் யாவும் அருளிடுவாய் !
Chorus:
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் உனையே மறுபடியும் !
கருணைக் கடலே மீனாட்சி
வணங்கினேன் மறுபடி மறுபடியும் !
வணங்கினேன் மறுபடி மறுபடியும்