ஸ்ரீ மார்க்கபந்து ஸ்தோத்திரம்

1)
சிரத்தோடு ஒளிர்கின்ற மகுடம் ! – நெற்றிக்
கண்தீயால் செய்தாயே காமனின் தகனம் !
கரத்தோடு பகைவெல்லும் சூலம் ! – இளம்
பிறை சூடா ! பெருந்தூய வழித்துணைவா சரணம்!
சம்போ மகாதேவ தேவா ! – சிவ
சம்போ மகாதேவ தேவேச சம்போ !
2)
உடலோடு அலங்காரம் நாகம் ! – கங்கை
அலையாடும் சிரத்தாலே அழகூட்டும் தேகம்!
ஓம்கார வனமானோ நீயும்?! – சித்தர்
குலம் போற்றும் திருப்பாதா !..வழித்துணைவா சரணம்!
3)
எப்போதும் பேரின்பக் கோலம் ! – தங்க
மலைமேரு உன்கையில் வில்லாக ஆகும் !
அழித்தாயே ராவணனின் கர்வம் ! – கரித்
தோலாக உடை சூடும் வழித்துணைவா சரணம்!
4)
சடைமுடியாய் விரிந்திடுமே வானம் ! – வாச
மல்லிகைப் பூபோல பற்களெலாம் மின்னும் !
உடைத்தாயே மன்மதனின் கர்வம் ! – கோடி
சூரியனாய் ஒளிவீசும் வழித்துணைவா சரணம்!
5)
மந்தார மலை விஞ்சும் வலிமை ! – வாரிக்
கொடுப்பதிலே மந்தாரத் தருவிஞ்சும் கருணை !
தாமிரத்தை விடசிவப்பு வண்ணம் ! – கடல்
ராசன்விட பெருந்தீரம் வழித்துணைவா சரணம்!
6)
அப்பையர் அருள்செய்த துதியாம் – இதைத்
தப்பாமல் பயணங்கள் செயும்போது சொன்னால்..
அப்படியே வேண்டியவை நடக்கும் – செல்லும்
வழியாவும் பயம்தீரும் சிவனேசன் அருளால்…!